கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தை சந்தித்த அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். தமிழகத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாபுரத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இந்த பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருணாபுரம் பகுதியில் இருக்கக்கூடிய பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து வருகின்றார். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவரைப் பார்த்தவுடன் கதறி அழுது தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் நேற்று காலை தொடங்கி இன்று வரை பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் மரண ஓலம் சத்தம் கேட்ட வண்ணமே இருக்கிறது. தொடர்ச்சியாக இந்த பகுதிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்தபடி இருக்கின்றனர்.. இதற்கிடையே பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.